மயிலாடுதுறை, மே 22: மயிலாடுதுறையில் சுகாதார கேட்டை பரப்பும் பாதாள சாக்கடையை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் முடிவடைந்து தனியார் பாராமரிப்பில் இயங்கி வந்தது. பல்வேறு பிரச்னைகளை சந்தித்ததாலும், நகராட்சிக்கு தொடர்ந்து கெட்டப்பெயர் ஏற்படுத்தி வந்ததாலும் இந்த ஆண்டு பழைய ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு புதிய ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 3 மாதமாகியும் பாதாள சாக்கடைபராமரிப்பு பணி அவ்வளவு திருப்தியாக இல்லை. ஏற்கனவே பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டியிலிருந்து சாக்கடைக் கழிவுகள் வெளியேறி வந்த நிலையே மீண்டும் தொடர்கிறது. நகராட்சியிடம் புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக திருஇந்தளூர் சிவன்கோயிலை ஒட்டியுள்ள பகுயிலிருந்து கழிப்பறைநீர் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் வழிந்து சாலை ஓரத்தில் உள்ள காலி இடத்தில் தேங்கி நிறைகிறது.