க.பரமத்தியில் வாரச்சந்தையன்று பெருகும் சாலையோர கடைகள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?

க.பரமத்தி, மே 22:  க.பரமத்தியில் செவ்வாய்தோறும் கூடும் வாரச்சந்தை அன்று ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று க.பரமத்தி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  க.பரமத்தி ஒன்றியம் பரமத்தி கடைவீதியில் காவல்நிலையம் எதிரே செவ்வாய்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. சந்தைக்குள் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடைகள் போட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் பலர் வாரச்சந்தை நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறு, சிறு கடைகளை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள், லோடு ஏற்றி செல்லும் லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையோர கடைகள் இடையூறாக உள்ளது.

சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்து இடையூறால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் வாகன ஓட்டுனர்களுக்கும், நடந்து செல்வோருக்கும் அடிக்கடி வாக்குவாதம், வாய்தகராறு ஏற்படுகிறது. எனவே வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை மாற்றி அந்த கடைகளை சந்தைக்குள் வைத்து வியாபாரம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: