தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் சாலையில் உள்ள குளக்கரை அருகே நேற்று காலை டிராவல்ஸ் கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அதில் ஏசி போட்டபடி டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தார். மதியம் 3 மணி வரை அதே இடத்தில கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார் கதவை திறக்க முயற்சித்தபோது திறக்க முடியவில்லை. இதையடுத்து, கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே டிரைவர் அசைவற்று மயங்கிய நிலையில் இருந்தார். இதனால், 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.