சென்னை விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: 4 பேர் சிக்கினர்

சென்னை: இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 2.45 மணிக்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யாசர் அராபத் (25), ஜகீர் உசேன் (34) ஆகியோர் இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னைக்கு திரும்பி வந்தனர். சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 340 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு  11.1 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு அபுதாபியில் இருந்து எட்டியார்டு ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த பாசா மொகிதீன் (35) என்பவர் சுற்றுலா பயணியாக அபுதாபி சென்று, சென்னைக்கு திரும்பி வந்தார்.

அவரிடம் இருந்த பழச்சாறு பிழியும்  புதிய மெஷினை சோதனை செய்தபோது, அதில் தங்கம் இருப்பது தெரிந்தது. இதன் எடை  175 கிராம். இதன் சர்வதேச மதிப்பு 5.42 லட்சம். அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.   

நேற்று காலை 7.45 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு வந்தது.  அதில் ராமநாதபுரத்தை  சேர்ந்த சதக்கத்துல்லா (46) என்பவர் சார்ஜாவிற்கு சுற்றுலா பயணி விசாவில் சென்று திரும்பி வந்தார். அவரை சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 443 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு 14.5 லட்சம். அவரை கைது செய்து, தங்கத்தை மீட்டனர். 

Related Stories: