எர்ணாவூரில் திடீர் தீவிபத்து 4 குடிசைகள் எரிந்து நாசம்

திருவொற்றியூர், மே 22: எர்ணாவூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து நாசமானது. எர்ணாவூர், ஆதிதிராவிடர் காலனி, 15வது தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (47). இவர், நேற்று முன்தினம் மாலை தனது குடிசை வீட்டை பூட்டி விட்டு, திருவொற்றியூர் பாரத் நகரில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் இவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் குடிசை தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ பரவியது. இதில், தார்ஷீட் போட்ட வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால், மேற்கண்ட வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

பின்னர், அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தகவலறிந்து எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. குடிசைகளில் இருந்த நகை, பணம், துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: