திருவொற்றியூர், மே 22: எர்ணாவூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து நாசமானது. எர்ணாவூர், ஆதிதிராவிடர் காலனி, 15வது தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (47). இவர், நேற்று முன்தினம் மாலை தனது குடிசை வீட்டை பூட்டி விட்டு, திருவொற்றியூர் பாரத் நகரில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் இவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் குடிசை தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ பரவியது. இதில், தார்ஷீட் போட்ட வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால், மேற்கண்ட வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.