ஊத்துக்கோட்டை, மே 22: பெரியபாளையம் அருகே ஏனாம்பாக்கம் தொளவேடு ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில், ஏனம்பாக்கம் கிராமம் உள்ளது. இதை சுற்றி கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள், விவசாய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு இக்கிராமத்தை ஒட்டி உள்ள, ஏனம்பாக்கம் ஆரணியாற்றில் இறங்கி தண்டலம் சென்று, அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.