ஏனம்பாக்கம்-தொளவேடு கிராமங்களை இணைக்கும் ஆரணியாற்று பாலத்தில் சீரமைக்கப்படாத தடுப்பு சுவர்

ஊத்துக்கோட்டை, மே 22: பெரியபாளையம் அருகே ஏனாம்பாக்கம் தொளவேடு ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம்  ஒன்றியத்தில், ஏனம்பாக்கம்   கிராமம் உள்ளது. இதை சுற்றி கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள், விவசாய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு  இக்கிராமத்தை ஒட்டி உள்ள, ஏனம்பாக்கம்  ஆரணியாற்றில் இறங்கி  தண்டலம் சென்று, அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை  ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.

மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால், இந்த 20 கிராம மக்கள் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாக 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை இருந்தது. இந்த நிலையை தவிர்க்கவும் ஏனம்பாக்கம்-தொளவேடு பகுதிகளை இணைக்கவும் ஆரணியாற்றின் குறுக்கே கடந்த 2011-2012ம் ஆண்டு ₹ 6 கோடி செலவில் ேமம்பாலம் கட்டப்பட்டது. இதில், பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதையுடன் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டதால் 20 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்து விட்டது. அந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் தவறி ஆற்றுக்குள் விழுந்து காயம் அடைவதை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக கற்கள் வைக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: