கும்மிடிப்பூண்டி, மே 22: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு எளாவூர் சோதனை சாவடி வழியாக அதிமுக பிரமுகரின் காரில் கடத்த முயன்ற 100 கிலோ மண்புழுவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தமிழகத்திலிருந்து, ஆந்திராவுக்கு கடல் மண்புழுக்கள் கடத்துவதாக ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் எஸ்.ஐ., கணேஷ், சோதனை சாவடிக்கு சென்றார். அந்த வழியாக ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது அவ்வழியாக வந்த சேர்மன் என்று பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதனுள்ளே ஐஸ்சுடன் கூடிய சுமார் 100 கிலோ மண்புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த இருவரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.