எளாவூர் சோதனை சாவடி வழியாக ஆந்திராவுக்கு அதிமுக பிரமுகர் காரில் கடத்த முயன்ற 100 கிலோ கடல் மண்புழுக்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, மே 22:  தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு எளாவூர் சோதனை சாவடி வழியாக அதிமுக பிரமுகரின் காரில் கடத்த முயன்ற 100 கிலோ மண்புழுவை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தமிழகத்திலிருந்து, ஆந்திராவுக்கு கடல் மண்புழுக்கள் கடத்துவதாக ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் எஸ்.ஐ., கணேஷ், சோதனை சாவடிக்கு சென்றார். அந்த வழியாக  ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது அவ்வழியாக வந்த சேர்மன் என்று பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதனுள்ளே ஐஸ்சுடன் கூடிய சுமார் 100 கிலோ மண்புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த இருவரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அஜித் (25), பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த அருள் (42) என தெரியவந்தது. மேலும் இந்த கடல் மண்புழுக்கள் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு கொண்டு சென்று இறால் பண்ணைகளுக்கு விற்கப்பட இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் மண் புழுக்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடல் மண்புழு கடத்தி வந்த கார் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த அதிமுக மீன்வள கூட்டுறவு சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தையும் ஆரம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: