ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

காஞ்சிபுரம், மே 22: காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (21). நிறைமாத கர்ப்பிணி. திங்கள்கிழமை மாலை ஜெயந்திக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள், 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக தேனம்பாக்கம் சென்ற 108 ஆம்புலன்சில், ஜெயந்தியை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆனால்,  மருத்துவமனைக்கு செல்லும்  வழியில் மிலிட்டரி ரோட்டில் பிரசவ வலி அதிகமாகி ஜெயந்தி துடித்தார்.இதையடுத்து, ஆம்புலன்சை நிறுத்திய மருத்துவ உதவியாளர் மீனா, ஜெயந்திக்கு பிரசவம் பார்த்தார். அப்போது, அவருக்கு 2.7 கிலோ எடையுள்ள அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய் மற்றும் சேயை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆம்புலன்சிலேயே மருத்துவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மீனா மற்றும் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்திக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: