ஆற்காடு, மே 22: ஆற்காடு அருகே குடிநீர் தேவைப்படும் பொதுமக்களுக்கு விவசாயி இலவசமாக தனது டிராக்டர் மூலம் குடிநீரை வழங்கி வருகிறார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(எ) குட்டி(38) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள இவர் அதில் விவசாயம் செய்து வருகிறார். மேலும், சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில், மாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்படுவதை பார்த்த விவசாயி செல்வம் அவர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க முடிவு செய்தார். தொடர்ந்து, தனது விவசாய கிணற்றில் இருந்து பெரிய சின்டெக்ஸ் டேங்க்குகள் மூலம் தண்ணீர் நிரப்பி அதனை தனது சொந்த டிராக்டரில் வைத்து மாம்பாக்கம், சொறையூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு தினமும் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்.