தோகைமலை, மே 21: தோகைமலை அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியபட்டி ஊராட்சி வடக்குசேறுபட்டியை சேர்ந்த விவசாயி மருதமுத்து (50). இவர் அதே ஊரை சேர்ந்த தனது உறவினர் கருப்பாயம்மாளுடன் தோகைமலையில் உள்ளவெள்ளபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு பைக்கில் வந்தார். பின்னர் திருவிழாவில் நேர்த்திக்கடனை முடித்து விட்டு மீண்டும் மருதமுத்து தனது வீட்டிற்கு தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது டி.இடையபட்டி அருகே உள்ள கரையாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்ற போது பெரியபட்டியை சேர்ந்த நல்லுச்சாமி என்பவர் மகன் தினேஷ் (24) எதிரே ஓட்டி வந்த பைக் மருதமுத்து பைக் மீது மோதியது.
இதில் மருதமுத்து மற்றும் கருப்பாயம்மாள் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருதமுத்து இறந்தார். இதுகுறித்து இறந்து போன மருதமுத்து உறவினர் கதிர்வேல் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தினேஷ் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.