விருத்தாசலம், மே 21: விருத்தாசலம் அருகே தந்தை திருமண சீர்வரிசை தராததால் அவரை தாக்கிய மகள், கணவருடன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (69), விவசாயி. இவருக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். அதில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. நான்காவது மகள் பிரியா (25) அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அதனை சாமிநாதன் ஏற்காமல் திருமணத்துக்கு செய்ய வேண்டிய எந்த சீர்வரிசையும் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது மனைவி பிரியாவுடன் சென்று மாமனார் சாமிநாதனிடம் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய சீர்வரிசையை செய்யும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.