சின்னசேலம், மே 21: வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்த அதிகாரிகள் 60கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.3200 அபராதம் விதித்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பொழிவு காலத்தில் நிலத்தின் மேல்மட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்து இருப்பதால் மழைநீர் சேமிக்கப்படாமல் வீணாகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அமலில் உள்ளது. இருப்பினும் ஒரு சில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாக புகார் வருவதையடுத்து கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவு படி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் சின்னசேலம், வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.