வேலூர், மே 20: கடந்த 8 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப் டாப் பயன்பாடு தொடர்பான விவரங்களை திரட்டும் பணியில் பள்ளிக்கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப் டாப்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும், பாடம் தொடர்பான அதிகப்படியான தகவல்களை அறிந்து கொள்ளவும் முடியும் என்பதற்காக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இவ்வாறு பெறப்படும் லேப் டாப்களை மாணவர்கள் வெளியில் விற்பனை செய்யக்கூடாது என்றும், வேறு யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால், இலவச லேப் டாப்களை பெறும் மாணவர்களில் நூற்றில் 10 சதவீம் பேரே அரசு வழங்கிய இலவச லேப் டாப்பை இன்னமும் பயன்படுத்தி வருவதாகவும், மற்றவர்களின் லேப் டாப்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பழுதடைந்து பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிய வந்தது.