குலசேகரம், மே 21: உலக தேனீ தினம் தேனீ வளர்ப்போர் மற்றும் தேன் உற்பத்தியாளர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. குலசேகரம் கொட்டூர் பகுதியில் நடந்த உலக தேனீ தின விழாவில் குமரி மாவட்ட முன்னோடி தேன் உற்பத்தியாளரும் தேனீ வளர்ப்பு பயிற்சியாளருமான ஹென்றி தலைமை வகித்தார். வசந்தகுமார் எம்எல்ஏ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், அயக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கரமணி, காங். தலைவர் வினோத் ராய், திற்பரப்பு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க நிர்வாகி ஜூடஸ்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் மோகன் உள்பட பலர்கலந்து கொண்டனர். விழாவில் வசந்தகுமார் எம்எல்ஏ பேசியதாவது; தேனீக்கள் இல்லை என்றால் விவசாயமே இல்லை என்ற வகையில் விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ளன. குமரி மாவட்டம் தேன் உற்பத்திக்கு உகந்த மாவட்டம் ஆகும். இங்கு தேன் உற்பத்தியை பெருக்குவதோடு, தேனீ வளர்க்க உரிய பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேனீக்களை நோய்களில் இருந்து பாதுகாக்க தேனீ ஆராய்ச்சி மையம் குமரி மாவட்டத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.