கழுகுமலையில் ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா?

கழுகுமலை, மே 21: கழுகுமலை குமரேசன் நகரில் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையிலுள்ள மின் கம்பம் விரைவில் மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் அந்த பகுதி மக்கள் உள்ளனர். கழுகுமலை வார்டு எண் 5, குமரேசன் நகரில் உள்ள தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் மின் கம்பம் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. அதன் அடிப்பாகத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்புறமுள்ள கம்பிகள் தெரிகின்றன. இந்த மின் கம்பம் எந்த நேரத்தில் கீழே விழும் என்ற ஆபத்தான நிலை உள்ளது. நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும், மற்றும் பொது மக்களும் இந்த மின் கம்பம் அருகே வரும் போது மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் அதன் அருகிலேயே சென்று விளையாடுவதால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மிகப் பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் ஆபத்தான மின்கம்பத்தை துரிதமாக மாற்றி அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Related Stories: