திருப்பூர், மே19: வாக்களிக்க பணம் கொடுக்கும் நபர்களிடம் நம்பிக்கை, நாணயம், தூய நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியிருப்பதாவது: ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிப்பது நம்முடைய கடமை. மக்கள் சேவை செய்பவர்கள் எதிர்பார்ப்புகள் இன்றி சொந்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும். ஏழை, எளியோர் முதல் பணக்காரர்கள் வரை கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை உள்ளாட்சி அமைப்புகளில் வரியாக செலுத்தும் தொகைகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இந்த நிதியில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக தரமான பணிகளை செய்ய வேண்டும். பணத்தை வாங்கி கொண்டு ஓட்டளிப்பது அதிகரித்து விட்டது. எங்கள் வீட்டில் இவ்வளவு ஓட்டு என பேரம் பேசி பெற்றுக்கொண்டு ஓட்டளிக்கின்றனர்.