பிறந்தநாள் கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் தாய், தந்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பாசக்கார மகன் பாட்டியும் படுகாயம்

திருமலை, மே 17: பிறந்த நாள் கொண்டாட பணம் கொடுக்காத தாய், தந்தையை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மார்காபுரம் எஸ்.சி காலனியை சேர்ந்தவர் கல்லய்யா. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன், மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரகாஷ் அதே பகுதியில் இண்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்து, பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளான். ஆனால், அவரது பெற்றோர் மற்றும் பாட்டி அங்கம்மா, பணம் கொடுக்க இயலாத நிலையில் இருக்கிறோம் என்று கூறினார்களாம். இதனால் ஆவேசமடைந்த பிரகாஷ், தான் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரேலை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினாராம்.

அப்போது பிரகாஷின் பெற்றோர் மற்றும் பாட்டி அவரிடமிருந்த கேனை பறித்துக்கொண்டு தாங்களும் தீக்குளிப்போம் என்று பதிலுக்கு மிரட்டி பெட்ரோலை தங்கள் மீது ஊற்றிக்கொண்டனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த பிரகாஷ் தீ பற்ற வைத்து அவர்களின் மீது வீசினாராம். உடல் முழுவதும் தீப்பற்றி அலறித்துடித்த கல்லய்யா, லட்சுமி, அங்கம்மாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தொடர்ந்து தீயை அணைத்து 3 பேரையும் மார்காபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த மார்க்காபுரம் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மகனை போலீசார் கைது செய்தால் அவரின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க செய்வதற்காக கல்லய்யா, லட்சுமி, அங்கம்மா ஆகியோர் தாங்களே தீக்குளித்ததாக போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

Related Stories: