சேத்துப்பட்டு, மே 16: சேத்துப்பட்டு பகுதிகளில் நிலவும் வறட்சியால், கரும்பு பயிர்கள் கருகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய கிணறுகள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது. கிணற்று நீரை நம்பி வைத்த பயிர்கள் எல்லாம் தண்ணீரின்றி கருகி வருகிறது. சேத்துப்பட்டு பகுதிகளில் கரும்பு விவசாயிகளின் நிலை படுமோசமாக உள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் கரும்பு பயிர்கள் கருகி போயுள்ளன. வங்கிக்கடன், உரம் வாங்க கடன் என பல்வேறு இடங்களிலும் கடன் வாங்கி, பார்த்துபார்த்து பயிரிட்ட கரும்புகள் தற்போது கருகி வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையே கசப்பாகி உள்ளது.