பொன்னமராவதி, ஏப்.23: பொன்னமராவதில் ஏற்பட்ட கலவரம் இயல்பு நிலைக்குத் திரும்பியதால் 144 தடை உத்திரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்தரையர் சமூகத்தினரை இழிவுப்படுத்தி வாட்ஸ்அப்பில் வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி கடந்த 18ம் தேதி இரவு மற்றும் மறுநாள் ஏற்பட்ட போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரமாக மாறியது. இதனையடுத்து 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை இப்பகுதியில் பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டது.