சிதம்பரத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகள்

சிதம்பரம், ஏப். 22: சிதம்பரம் நகரப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடலூர்  மாவட்டம் சிதம்பரம் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் ரூ.1 கோடி செலவில் தேரோடும் நான்கு வீதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டது.  சிதம்பரம் நகரில் வீதிகள் குறுகலாக உள்ளதால் நடைபாதை அமைக்கப்பட்டவுடன்  வீதிகள் சுருங்கின. மேலும் நடைபாதைகள், கடைகளுக்காகவே அமைக்கப்பட்டது போல் கடை  பாதையானது. சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ள நான்கு சன்னதிகளிலும் நடைபாதை  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கீழசன்னதி, தெற்குசன்னதி உள்ளிட்ட 4  சன்னதிகளிலும் பக்தர்கள் நடைபாதைகளில் நடக்க முடியவில்லை. அதே போன்று 4  வீதிகளிலும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும்,  பொதுமக்களுக்கும்

இடையூறு ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறை என்பதால் ஏராளமான  சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நகருக்கு வருகை தருகின்றனர். ஏற்கனவே சிதம்பரம்  நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. கோயிலை சுற்றியுள்ள மேலவீதி,  தெற்குவீதி, வடக்குவீதி, கீழவீதி பகுதிகளில் உள்ள நடைபாதைகள்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நடைபாதைக்கு வெளியே இருசக்கர வாகனங்கள், கார்கள்  நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது.  

இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையால்  ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து சிதம்பரம் நகரத்திற்கு வருவதால்  பொதுமக்கள் நடப்பதற்கே சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும். ஆகையால் நகரின்  நான்கு முக்கிய வீதிகளிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினால்  பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி நடைபாதையில் நடந்து செல்ல முடியும். ஆகையால் நகராட்சி நிர்வாகம்  நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால்  நடைபாதையை முழுமையாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிதம்பரம்  சப்-கலெக்டர் விசுமகாஜனை சந்தித்து மக்களுக்கு உதவாத நடைபாதையும்  முற்றிலும் அகற்ற வேண்டும் என மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்ெகாண்ட அவர் உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Related Stories: