முன்விரோத தகராறில் மோதல் 10 பேர் மீது வழக்கு பதிவு

திருக்கோவிலூர், ஏப். 21: திருக்கோவிலூர் அருகே காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சாதிபதி (58). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பழனிசாமி குடும்பத்திற்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் லட்சாதிபதியும், அவரது மகன் முகேஷ் என்பவரும் சம்பவத்தன்று தேர்தல் பணியில் ஈடுபட்டபோது, அவரை பழனிசாமி குடும்பத்தினர் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லட்சாதிபதி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து லட்சாதிபதியின் சகோதரர் முனுசாமி திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பழனிசாமி, அவரது மகன்கள் சதீஷ்குமார், செல்வகுமார், மனைவி கவுரி, தங்கவேல் மகன் அன்பழகன், அன்பழகன் மகன் முருகதாஸ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று லட்சாதிபதி தரப்பினர் பழனிச்சாமி தரப்பினரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பைக்கையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் லட்சாதிபதி, அவரது மகன் முகேஷ், மனைவி தமிழ்செல்வி, சுகன்யா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: