தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

அரியலூர், ஏப்.3: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல்  அ லுவலர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல்அலுவலரும், கலெக்டருமான  விஜயலட்சுமி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர்கள் அவர்களின் வாகனங்களை உரிய அதிகாரியிடம் பதிவு செய்து கொள்வதுடன், பெற்ற அனுமதி ஆணையத்தின் அசல் மட்டுமே வாகனத்தின் கண்ணாடி முகப்பு பகுதியில் ஒட்டி வைக்க வேண்டும். நகல்களை ஒட்டினால் சம்மந்தப்பட்ட வாகனங்கள் கண்டறிந்து, பறிமுதல் செய்யப்படும். அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள், முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் அனுதாபிகள் எவரும் வேறு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.

வேட்பாளரின் தகுதி அடிப்படையில் சலுகை எதுவும் வழங்க முடியாது. அந்த அனுமதி ஆணையை தவறாக பயன்படுத்தும் நோக்கில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறாத வணிக நோக்கிலான வாகனங்களில் கொடிகள், ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யக் கூடாது.

வாகனத்தின் வெளிப்புற அமைப்பை மாற்றுதல் மற்றும் ஒலிப்பெருக்கி பொருத்துதல் ஆகிய செயல்களில் மோட்டார் வாகனச் சட்டத்தின் சரத்துக்கள் படியும், உள்ளுர் சட்டங்கள் விதிகளின்படியும் தான் இருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்திற்கு உட்பட்டு, உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே ரதம் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் கட்சி பணிமனை திறக்கும்போது, அத்தகைய அலுவலகங்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து, நடத்தக் கூடாது, வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள இடத்திலோ, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்திலோ கட்சி பணிமனைகள் அமைத்திட கூடாது. வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்குள் பிரசார பணிமனைகள் இருக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும்,கலெக்டர் விஜயலட்சுமி, தெரிவித்துள்ளார்.

Related Stories: