சீர்காழி, மார்ச் 19: சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படு–்த்த குறைந்த தொகை வழங்க உள்ளதால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் முடிவுசெய்துள்ளனர். விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை 180 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் வரை 56 கி.மீ தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிக்கு 1,470.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சீர்காழி சட்டநாதபுரத்திலிருந்து தென்னலக்குடி அண்ணங்கோயில், நாங்கூர், ராதாநல்லூர், பாகசாலை, காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், கருவிழந்தநாதபுரம், தலைச்சங்காடு உள்ளிட்ட 20 கிராமங்கள் வழியே நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த பகுதியில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு சதுரடிக்கு ரூ.6 முதல் ரூ.11 வரை வழங்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.