மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 19: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று மாலை காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் நடைபெற்றது.தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். தோழமைக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் ஜி.செல்வம்  அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். மேலும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் செல்வத்தை அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற செய்வது, வரும் 21ம் தேதி மதுராந்தகம் செய்யூர் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது.

22ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வது, 24ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக எம்எல்ஏக்கள் சிவிஎம்பி.எழிலரசன், புகழேந்தி, அரசு, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், ஜி.மோகனன், சி.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பாசறை செல்வராஜ், மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மேகநாதன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அசோகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் தீனதயாளன் உள்பட கூட்டணி கட்சிகளின்  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: