போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக மூதாட்டி புகார் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத போலீசார்

தாம்பரம், மார்ச் 19: போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக மூதாட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார். தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், காந்தி தெருவை சேர்ந்தவர் சசிகலா (61). இவரது கணவர் ராஜேந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகள்கள் ஜெயஸ்ரீ, வித்யா ஆகியோர் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர். சசிகலா மட்டும் சொந்த வீட்டில் தனியாக வசிக்கிறார். இந்நிலையில் சசிகலா, கடந்த 7ம் தேதி சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது நிலம் மற்றும் வீட்டை இஸ்மாயில், சரவணன், செந்தில்குமார் ஆகியோர், போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்தார். இந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, பீர்க்கன்காரணை போலீசாரக்கு கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால், பீர்க்கன்காரணை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சசிகலா கூறுகையில், ‘‘கடந்த 1979ம் ஆண்டு என் கணவர் ராஜேந்திரபாபு இந்த இடத்தை வாங்கினார். தற்போது நான் மட்டும் தனியாக இங்கு வசிக்கிறேன். எனது மைத்துனர் நாகராஜ் என்பவர் இந்த நிலத்தின் மீது பொய் ஆவணம் தயார் செய்து தாம்பரம் நிலவரித் திட்ட அலுவலகத்தில் பட்டா பெற்று, படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்தில்

இஸ்மாயில் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுபற்றி தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில், சம்பந்தப்பட்ட இடம் எங்களுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வேளையில், கடந்த 1.3.2019 அன்று பத்திரம் மற்றும் 4.3.2019 அன்று கிரய ஒப்பந்தப் பத்திரம் படப்பை பதிவு அலுவலகத்தில் முகமது இஸ்மாயில், செந்தில்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் என்னுடைய சொத்தை விற்பனை செய்வதற்கு பவர் கொடுத்து, கிரய ஒப்பந்தம் செய்து பதிவு செய்துள்ளனர். எனவே என்னுடைய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த இஸ்மாயில், சரவணன், செந்தில்குமார் ஆகியோர் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Related Stories: