அதிமுக பிரமுகர், மனைவியை தாக்கி நகைகளை பறித்து சென்ற 8 பேர் கைது

திருக்கழுக்குன்றம், மார்ச் 19: திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக பிரமுகரை தலையில் வெட்டி, நகையை பறித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (42). அதிமுக பிரமுகர். இவரது மனைவி ரேவதி (37). இவர்கள், மேட்டு கருமாரப்பாக்கம் கிராமத்தில் 15 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து, தர்பூசணி பயிரிட்டு 2 முறை அறுவடை செய்து விற்று வருகின்றனர். இதைதொடர்ந்து, அந்த நிலத்தில் சிறிய அளவிலான தர்பூசணி செடி இருந்ததால், அங்கு நாகரத்தினம், மனைவி ரேவதி ஆகியோர் காவல் காத்து வந்தனர்.  கடந்த 3 நாட்களுக்கு முன், மேற்கண்ட நிலத்துக்கு பைக்குகளில் வந்த 5 பேர், தர்பூசணியை விலைக்கு கேட்பதுபோல் நடித்து, திடீரென அவர்களை அரிவாளால் வெட்டி, தம்பதிகள் அணிந்திருந்த, 10 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் போலீசார், நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்குகளில் வந்த, 4 போரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால், சந்தோகமடைந்த போலீசார், 4 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.அதில், மேட்டு கருமாரப்பாக்கம் பகுதியில், அதிமுக பிரமுகர், அவரது மனைவியை தாக்கி, 10 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்படி செங்கல்பட்டை சேர்ந்த கார்த்திக் (27), மணிகண்டன் (28), வினோத்  (எ) பீட்டர் (25), அசோக் (23), ஆனூர் வெங்கடேசன் (28), கூடுவாஞ்சேரி ஆறுமுகம் (41) திருநெல்வேலி முருகன் (31), மேட்டு கருமாரப்பாக்கம் தர்ஷினி (41) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: