பல்லாவரம், மார்ச் 19: பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட சாலை, தெருக்களில் போதிய குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் சாலையில் குப்பையை கொட்டும் நிலை உள்ளது. இதுபோன்ற குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் முறையாக அகற்றாததால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பம்மல் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைகள், தினமும் சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதுபோன்று குப்பை கொட்டும் இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை தொட்டிகளை வைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டிச் செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக பம்மல் நல்லதம்பி சாலை, சங்கர் நகர் பிரதான சாலை, மூவேந்தர் நகர், எம்ஜிஆர் சாலை ஆகிய பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி காணப்படுகின்றன. நகராட்சி, துப்புரவு ஊழியர்கள் இந்த குப்பையை முறையாக அகற்றாததால் நாள் கணக்கில் தேங்கி, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடந்தாண்டு பரவியதைப் போன்று இந்த ஆண்டும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.