பம்மல் நகராட்சியில் அவலம் போதிய தொட்டிகள் இல்லாததால் சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

பல்லாவரம், மார்ச் 19: பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட சாலை, தெருக்களில் போதிய குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் சாலையில் குப்பையை கொட்டும் நிலை உள்ளது. இதுபோன்ற குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் முறையாக அகற்றாததால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

பம்மல் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைகள், தினமும் சாலையோரம் கொட்டப்படுகின்றன.  இதுபோன்று குப்பை கொட்டும் இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை தொட்டிகளை வைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டிச் செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக பம்மல் நல்லதம்பி சாலை, சங்கர் நகர் பிரதான சாலை, மூவேந்தர் நகர், எம்ஜிஆர் சாலை ஆகிய பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி காணப்படுகின்றன. நகராட்சி, துப்புரவு ஊழியர்கள் இந்த குப்பையை முறையாக அகற்றாததால் நாள் கணக்கில் தேங்கி, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடந்தாண்டு பரவியதைப் போன்று இந்த ஆண்டும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் நாங்கள் செலுத்தும் வரியால், அரசுக்கு ஏராளமான தொகை வருவாயாக கிடைக்கிறது. ஆனால் மக்கள் நலத் திட்டப்பணிகள் மட்டும் ஏனோ முறையாக மக்களுக்கு கிடைப்பதே இல்லை. சாலை, தெருவிளக்கு, குடிநீர், மழைநீர் கால்வாய் உள்பட அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் முறையாக செய்வதில்லை.

தெருக்களில் போதிய குப்பை தொட்டிகள் வைக்கவில்லை. மேலும் நகராட்சி ஊழியர்கள் முறையாக அகற்றாததால் சாலையில், குப்பைகள் மலைபோல் தேங்கிக் காணப்படுகின்றன.

அவற்றை அந்த பகுதிகளில் சுற்றித் திறியும் மாடு, நாய் உள்ளிட்டவை கிளறுவதால் குப்பைகள் சாலை முழுவதும் பரவுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளோம். இதுபற்றி புகார் தெரிவிக்க நகராட்சி அலுவலகம் சென்றால், முதன்மை செயற்பொறியாளர் சரவணன், பொதுமக்களை சந்திக்க மறுக்கிறார். மாறாக ஒப்பந்ததாரருடன் மட்டும் மணிக்கணக்கில் தனது அறையில் பேசி வருகிறார்.  எனவே, பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு, நகராட்சி பகுதிகளில் போதிய குப்பை தொட்டிகளை அமைத்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதுடன், நோய்கள் பரவாமல் காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: