கொடுங்கையூரில் வீடு புகுந்து தம்பதிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

சென்னை, மார்ச் 19: சென்னை கொடுங்கையூரில் வீடுபுகுந்து தம்பதியை சரமாரி வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் எம்ஆர் நகர் மீனாட்சி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (57). இவரது மனைவி இதயவேணி (54). இவர்களது மகள் நித்யபிரியா (35). நேற்று முன்தினம் காலை ஒரே பைக்கில் 3 பேர் மகேந்திரன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள், ‘‘பிரியாவின் வீடு இதுதானா’’ என்று கேட்டனர். வீட்டில் இருந்தவர்கள், ‘‘நீங்கள் யார், எந்த ஊர், எதற்கு கேட்கிறீர்கள்,’’ என கேட்டனர். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி மகேந்திரன் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் மாலையில், அதே 3 பேர் மீண்டும் வந்து மகேந்திரனின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்ததும் உள்ேள புகுந்த அவர்கள், தாழ்ப்பாளை போட்டுக் கொண்டு மகேந்திரன், இதயவேணி ஆகியோரை சரமாரி வெட்டினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர். உடனே, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த காயத்துடன் கிடந்த 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஆள் மாறாட்டத்தில் தம்பதியை வெட்டியது தெரியவந்தது.

போலீசரின் அலட்சியமே காரணம்

இதுகுறித்து இதயவேணி கூறுகையில், “காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் இது பிரியா வீடுதானா என்று கேட்டனர். இதனால் மகளை தேடி வந்திருக்கிறார்களோ என நினைத்து, வீட்டில் இருக்க வைத்தோம். அவர்களிடம், நீங்கள் யார் எனக் கேட்டபோது பதிலளிக்காமல் அவர்கள் மாயமானதால் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தோம்.

ஆனால் புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழித்தனர். எங்களது வீட்டின் மேல்மாடியில் தங்கியிருக்கும் பிரியா என்பவரை தேடிவந்துள்ளனர். அவர் பியூட்டி பார்லரில் வேலை செய்கிறார். ஆள் மாறாட்டத்தில் எங்களை வெட்டி விட்டனர். நாங்கள் கொடுத்த புகாரை பெற்று போலீசார் விசாரித்து இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. போலீசாரின் அலட்சியமே இதற்கு காரணம். எனவே, போலீசார் மீதும் எங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories: