திண்ணப்பா தியேட்டர் தெருவில் இருந்து செங்குந்தபுரம் வரை ஒருவழிப்பாதையில் அத்துமீறும் வாகனங்களால் கடும் நெரிசல்

கரூர், மார்ச் 19: ஒன்வேயில் வாகனங்கள் அத்துமீறலால் நெரிசல் ஏற்படுகிறது. கரூர் திண்ணப்பா தியேட்டர் தெருவில் இருந்து செங்குந்தபுரம் செல்லும் சாலையில் நெரிசலைக் குறைப்பதற்காக போக்குவரத்து போலீசார் ஒருவழிப்பாதையாக அறிவித்துள்ளனர். இந்த இடத்தில் அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் இந்த வழியாக அத்துமீறி செல்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் வரிசை கட்டி நின்று விடுகின்றன. இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளில் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதில் அதிகாரிகள் தலையிட்டு நகரமைப்பு விதிகளின்படி வாகனம் நிறுத்தும் இடத்தை அதற்கென ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவழிப்பாதையில் அத்துமீறி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த தெருவில் போக்குவரத்து நெரிசல் தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: