சென்னை: பங்குச்சந்தையில் லாபம் ஈட்டித் தருவதாக கூறி, திருவள்ளூரில் 60 பேரிடம் 3.17 கோடி பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் நகராட்சி புங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது உறவினரான அர்ஜுன் (எ) கந்தவேல் பட்டாபிராமில் வசித்துவந்தார். இவர் சென்னை அரும்பாக்கத்தில் பங்கு சந்தை ஷேர்களை வாங்கி விற்கும் புரோக்கராக வேலை செய்து வந்தார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என அர்ஜுன் கூறியதால், கடந்த 2015ம் ஆண்டு முதல் பல தவணைகளாக 20 லட்சம் பணத்தை இளங்கோவன் செலுத்தியுள்ளார். இதேபோல், மயிலாப்பூரில் உள்ள வி.எம்.பைனான்ஸ் மூலம் பங்குச்சந்தையில் பணம் செலுத்தினால், 3 மாதத்துக்கு ஒருமுறை லாபம் ஈட்டித்த தருவதாக கூறி, திருவள்ளூர் புங்கத்தூர் பகுதியில் உள்ள இளங்கோவன் பெயரை பயன்படுத்தி, 60 பேரிடம் 3.17 கோடி வசூலித்து உள்ளார்.