சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை வைத்து பாலியல்

சென்னை, மார்ச் 15: சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் நடத்தி வந்த தொழிலதிபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர், 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து செல்வதாக குடியிருப்புவாசிகள் விரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது, சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு இளம் பெண்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் வந்து செல்வது தெரிந்தது. உடனே போலீசார் அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்குள் நுழைத்து சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜபெருமாள், நாமக்கல் பகுதியை சேர்ந்த அவரது உதவியாளர்கள் பாலாஜி, மதுரவாயல் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து 3 இளம்பெண்களையும் மீட்டனர்.

பின்னர் 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜபெருமாள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருக்கானி மூவிஸ் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார். நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை மூளைச்சலவை செய்து புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல லட்சம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.  இதுபோல் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஹீரோயின் ஆசை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுவரை இவர்கள் எத்தனை இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்கள்? என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: