திருச்சி, மார்ச் 15: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது.பொள்ளாச்சியில் மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் உரிய நீதிகேட்டும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் அதிகாரம் உறுப்பினர் நிர்மலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ, சிபிசிஐடி விசாரணை செய்வது குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாக உள்ளது. அனைவரையும் பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டுப்பாடி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கிடையே கைது செய்யப்பட்ட 4 பேரின் புகைப்படங்களை பெண்கள் துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, ஒருங்கிணைப்பாளர் ராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் திராவிடமணி, பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கமலகண்ணன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.