திருச்செங்கோடு அருகே குடிசை தீப்பிடித்து முதியவர் கருகி சாவு

திருச்செங்கோடு, மார்ச் 15: திருச்செங்கோடு அருகே குடிசை தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் பலியானார். மேலும், 14 ஆடுகளும் பரிதாபமாக இறந்தது. திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் கோக்கலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்மலை(75). கூலித்தொழிலாளியான இவர், தனது குடிசையை ஒட்டி ஆட்டுக்கொட்டகை அமைத்து, 6 குட்டிகள் உள்பட 14 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் சாப்பாட்டிற்கு பின்பு பொன்மலை குடிசையில் படுத்து தூங்கினார். அப்போது, திடீரென குடிசையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. அந்த சமயத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் வீடு தீப்பிடித்துக்கொண்டதை பொன்மலை அறியாத நிலையில், அவரது மீது மேற்கூரை விழுந்தது. மேலும், அருகில் உள்ள கொட்டகைக்கும் தீ பரவியது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் தீயில் சிக்கியவாறு அபய குரல் எழுப்பினர். இதனைக்கண்டு அப்பகுதி மக்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீயில் உடல் கருகிய பொன்மலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 14 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.  இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பொன்மலைக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததால், பீடியை அணைக்காமல் போட்டதில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: