ஆட்டோ டிரைவரை தாக்கிய நேபாளிகள் 4 பேர் கைது

சென்னை: மெரினா கண்ணகி சிலை ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் ஆனந்தன் (25) என்பவரிடம் நேற்று முன்தினம் நேபாளத்தை சேர்ந்த 4 பேர் சவாரிக்கு அழைத்துள்ளனர். அவர் வர மறுக்கவே 4 பேரும் ஆனந்தனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பீம்பகதூர் (55), ராபின் (27), நாவீன் (23), ரவிலிம்பு (23) ஆகியோரை கைது செய்தனர்.

* சூளையை சேர்ந்தவர் பிரிஜ் மோகன் (22) என்பவர் நேற்று மதியம் வீட்டருகே செல்போனில் பேசியபடி நடந்து வந்தபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மோகன் செல்போனை பறித்து சென்றனர்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (52) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து விலையுயர்ந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

* வில்லிவாக்கம் பலராமபுரம் 3வது தெருவை சேர்ந்த தமிழன்பு (33), இவருக்கும் பக்கத்துவிட்டில் வசிக்கும் சுந்தரமூர்த்தி (60) என்பருக்கும் வீட்டருகே செல்போன் டவர் அமைப்பதில் நேற்று ஏற்பட்ட தகராறில் தமிழன்பை சுந்தரமூர்த்தி  கத்தியால் குத்திவிட்டு தப்பினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

* ஆலந்தூர் சாலையில் கல்லாறு பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற பள்ளிக்கரணையை சேர்ந்த நவீன் (23) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்து, அவனிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த விக்கி (எ)விக்னேஷ் (27), திருவொற்றியூர் காவல்நிலையத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரை சேர்ந்த பூபாலன் (27), விநாயகபுரம், செங்குன்றம் நெடுஞ்சாலையை சேர்ந்த அரவிந்த் (25), தாம்பரம் முடிச்சூர் பகுதியை சேர்ந்த டேனியல் சாலமன் (25) ஆகிய 4 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: