பாடாலூர், மார்ச்15: ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மகா சம்பத் கவுரி உடனுறை நந்திகேஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காகவும் மழை பெய்து விவசாயம் செழித்து தனதானியம் பெருகிடவும் ஏழ்மை நிலை நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி பூலோகநாதசுவாமி கோவில் வார வழிபாட்டு மன்றத்தை சேர்ந்த குமாரவேல் தலைமையில் ஆன்மீக மெய்யன்பர்கள் நிகழ்ச்சி தொடர்பாக திருஞானசம்பந்தர் அருளிய மழைவேண்டுதல் பதிகம் பாராயணம் செய்தனர். இதனை தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் லால்குடி சந்திரமோகன் முதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பக்தர்களுக்கு திருவாசகம் பக்தி நூல்களை இலவசமாக வழங்கினார். இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி, அம்பாள், கணபதி, சண்முகர் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு புது வஸ்திரம் சாத்தப்பட்டது.