அரியலூர், மார்ச் 15: தேர்தல் புகார், குறைகளை தெரிவிக்க அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் 6 பறக்கும் படைக்குழுக்களும், 6 நிலையான கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரங்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு குழுவிலும் துணை தாசில்தார், வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல் சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 வீடியோ பதிவாளர் என மொத்தம் 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான கண்காணிப்பு பணியகளில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களில் பணமோ, பரிசு பொருட்களோ கொண்டு செல்கின்றனரா என்பதை ஆய்வு செய்வர். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார், குறைகளை தெரிவிக்கவும் தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெறவும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.