சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை வைத்து பாலியல்

சென்னை, மார்ச் 15: சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் சந்தேகப்படும்படி வந்து செல்வதாக குடியிருப்புவாசிகள் போலீசில் புகார் செய்தனர். அதன்படி, விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது, சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு இளம்பெண்களும், வசதிப்படைத்தவர்கள் வந்து செல்வது தெரிந்தது. உடனே போலீசார் அதிரடியாக சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்குள் நுழைத்து சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த அறைகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜபெருமாள், நாமக்கல்லை சேர்ந்த அவரது உதவியாளர்கள் பாலாஜி, மதுரவாயல் மேட்டுக்குப்பம் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். பின்னர் 3 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.

அதில், ராஜபெருமாள் கடந்த 3 மாதத்துக்கு முன் அருக்கானி மூவீஸ் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து, சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதனால், நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை மூளை சலவை செய்து, புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல லட்சம் சம்பாதித்தது தெரிந்தது. மேலும், இதுபோல் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை, ஹீரோயின் ஆசை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுவரை இவர்கள் எத்தனை இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: