தஞ்சை, மார்ச் 15: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யகோரி தஞ்சை மாவட்டத்தில அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை ரயிலடி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்குள்ளான அனைவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் திமுக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.