விழுப்புரத்தில் சாலை மறியல்

விழுப்புரம், மார்ச் 15: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் அறிவழகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: