நீண்ட நாளாக பூட்டிக் கிடக்கும் பரிவிரிசூரியன் விஏஓ அலுவலகம்

பணகுடி, மார்ச் 15: பணகுடி அருகே தளவாய்புரத்தில் நீண்ட நாட்களாக விஏஓ அலுவலகம் பூட்டிக் கிடப்பதால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணகுடி அருகே உள்ள பரிவிரிசூரியன் கிராமத்திற்குட்பட்ட நதிப்பாறை, ரெகுநாதபுரம், வீரபாண்டியன், சமாதானபுரம், தளவாய்புரம், கொமந்தான், சொக்கலிங்கபுரம் என 10க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களுக்கு தளவாய்புரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கிராமங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு சான்றிதழ் மற்றும் தேவைகளுக்காக விஏஓ அலுவலகம் சென்று வருகின்றனர்.

ஆனால் கடந்த சில வாரங்களில் பெரும்பாலான நேரங்களில் விஏஓ அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அவ்வவ்போது காலை நேரங்களில் அலுவலகம் திறக்கப்பட்டாலும், மதியத்திற்கு பிறகு பூட்டப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர், தாலுகா உள்ளிட்ட பல்வேறு அலுவலக பணி தொடர்பாக வெளியே செல்வதாலும், அலுவலகத்தை கவனிக்க உதவியாளர் இல்லாததாலும் அலுவலகம் பூட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அலுவலகத்திற்கு வரும் கிராம மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே மக்களின் நலன் கருதி அலுவலக நேரத்தில், விஏஓ ஆபீஸ் முழுமையாக திறந்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories: