ஆண்டிபட்டி, மார்ச் 15: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆண்டிபட்டியில் உள்ள கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நேற்று மதியம் 2.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்னை குறித்து விசாரணை நடத்த உடனடியாக தனி நீதிபதி நியமிக்க வேண்டும். இவ்வழக்கில் தொடர்புள்ளள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து மரண தண்டனை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கல்லூரி வளாகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஊர்வலமாக கோஷமிட்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் பிரேம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.