பரமக்குடி, மார்ச் 15: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சந்தைகடை, பஸ் நிலையம், ரயில்நிலையம், பெருமாள்கோவில், எமனேஸ்வரம், மணிநகர் போன்ற பகுதிகளில் பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை படுஜோராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வாரச் சந்தை, மினி விளையாட்டு அரங்கம், ரயில் நிலையம், காக்கா தோப்பு போன்ற இடங்களில் சுற்றி திரிகின்றனர்.கஞ்சா வாங்க தனது சொந்த வீட்டிலியே திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர்களே புகார் தெரிவிக்கும் நிலையில் உள்ளனர். காசு கிடைக்கும் காலங்களில் உள்ளுர் ரவுடிகளுடன் சேர்ந்து கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பரமக்குடி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களுக்கு வரும் அதிகபடியான வழக்குகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.