திண்டுக்கல், மார்ச் 15: திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் சின்னம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 103 முதல் 104 டிகிரி வரை அடிக்கிறது. வெயில் தாங்க முடியாமலும், தண்ணீர் இல்லாததாலும் வன விலங்குகள் சிரமப்படுகின்றன. மாடுகளை பகல் 11 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என கால்நடைத்துறையினர் எச்சரித்துள்ளனர்.திண்டுக்கல் நகர் மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளிலும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் சென்று குடங்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த தண்ணீரை காய்ச்சி குடிக்காமல் அப்படியே குடிக்கின்றனர். இதனால் தொற்று நோய்கள் ஏற்படுகிறது. கூடுதலாக வெயில் அதிகரித்துள்ளதால் சின்னம்மை நோயும் தாக்கியுள்ளது.மாவட்டத்தில் சாணார்பட்டி, செம்பட்டி, ரெட்டியார் சத்திரம், மேட்டுப்பட்டி உட்பட பல இடங்களில் சின்னம்மை பள்ளி குழந்தைகளுக்கு பரவி வருகிறது. ஒரு குழந்தைக்கு வந்தால் மறுநாள் கூடுதலாக ஐந்து குழந்தைகளுக்கு வந்து விடுகிறது.