திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்படும் தொகையினை மீண்டும் உரிய ஆதாரங்கள் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் எடுத்துச் செல்லும் நபர்களை பிடிப்பதற்காக 136 அலுவலர்களை கொண்ட 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையானது நடைபெற்று வருகிறது.அதன்படி நேற்று வரையில் 3 பேர்களிடம் 56 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ரூ.50 ஆயிரம் வரையில் நபர் ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதி உள்ள நிலையில் இதை தவிர ரூ.10 லட்சம் வரையில் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லலாம். இதையும் மீறி உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் நபர்களின் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.