முத்துப்பேட்டை பகுதியில் பல்லாங்குழியாக மாறிவரும் சாலைகள் தடுமாறும் வாகனங்கள் திணறும் வாகன ஓட்டிகள்

முத்துப்பேட்டை, மார்ச் 15: முத்துப்பேட்டை அருகே இடும்பாவனத்திலிருந்து கரையங்காடு வரையிலுள்ள வேதாரண்யம் சாலை குண்டும், குழியுமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் தடுமாறி செல்லும் அவலநிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையிலிருந்து கரையங்காடு வரை உள்ள வேதாரண்யம் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை என்பதால் தற்போது சாலையின் கப்பிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை முதல் தில்லைவிளாகம் வரையிலும், அடுத்தக்கட்டமாக தில்லைவிளாகம் முதல் இடும்பாவனம் வரையிலும் சாலை பெயரளவில் சீரமைக்கப்பட்டது. ஆனால், குறிப்பாக அதனை தொடர்ந்து உள்ள இடும்பாவனம் முதல் நாகை மாவட்டம் துவங்கும் துளசியாப்பட்டினம் எல்லை விலாங்காடு வரை சாலையை இதுநாள் வரை அரசு சீரமைக்க முன் வரவில்லை.இதனால் தில்லைவிளாகத்திலிருந்து கரையங்காடு கிராமம் வரை உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக பல்லாங்குழி போன்று உள்ளது.

 இதனால் வேதாரண்யத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் அங்கிருந்து முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டைக்கு செல்லும் பேருந்துகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் காலதாமதமாகிறது. மேலும் அப்பகுதியில் செல்லும் வாகனங்களும் குண்டும் குழியுமாக உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில் தனியார் கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள்  உள்ளதால் அங்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த சாலையை  இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 மேலும்  ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போது இந்த ஆட்சியிலாவது சாலை சீரமைக்கப்படுமா? என்று எதிர்பார்த்து வெறுத்துப்போய் உள்ளனர். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால்  இந்த  சூழலில்  இந்த சாலை இனியாவது சீரமைக்கப்படுமா? அல்லது இதே நிலைத்தானா? என்ற கேள்வி குறியில் இப்பகுதி மக்கள் உள்ளனர். அதே நேரத்தில் வரும் தேர்தலை புறக்கணிக்கும் எண்ணத்திலும் உள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், முத்துப்பேட்டை பகுதியில் அதிகளவில்  பேருந்து மற்றும் வாகன  போக்குவரத்து நிறைந்த பகுதி என்றால் முத்துப்பேட்டை முதல் வேதாரண்யம்  வரையிலான வழித்தடம்தான். இதில் தில்லைவிளாகம் முதல் கரையங்காடு வரையிலான இந்த சாலை தற்போது சேதமாகி  குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல வகையில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை சீரமைக்க இதுவரை ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலைத் துறையினரும் கண்டும்காணாமல் உள்ளனர் என்றனர்.

Related Stories: