திருமணம் செய்ய திட்டம் காதலி வர தாமதமானதால் ஏமாந்த காதலன் தற்கொலை முத்துப்பேட்டையில் போலீசார் விசாரணை

முத்துப்பேட்டை, மார்ச் 15: முத்துப்பேட்டையில் காதலி வர தாமதமானதால் ஏமாற்றமடைந்த காதலன் எலி மருந்து சாப்பிட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பகுதியை சேர்ந்த பிளஸ்டூ மாணவியும் கோயில் சித்தமல்லியை சேர்ந்த பூக்கடை தொழிலாளி  பிரவீன்குமாரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தீர்மானித்தது இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீர்மானித்தபடி கடந்த 9ம் தேதி காதலி வருகைக்காக பிரவீன் காத்திருந்தார். ஆனால் அவர் வருகை தாமதமானதால் ஏமாற்றமடைந்து எலி மருந்தை தின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு காதலி வந்துவிடவே இருவரும் பஸ் ஏறி பட்டுக்கோட்டை சென்றனர்.

 அப்போது பிரவீன் எலி மருந்து தின்றதை அறிந்த காதலி உடனடியாக அவரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரவின்குமார் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் நேற்று இறந்தார். தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார் மாணவியை மீட்டதோடு பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: