தூத்துக்குடி, மார்ச் 15:தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் சந்தீப்நந்தூரி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அவர்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்து பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 11ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்தள வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், சக்கர நாற்காலி மற்றும் வாக்களிக்க ஏதுவாக தனியாக வரிசை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.