தூத்துக்குடி, மார்ச் 15:பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி தூத்துக்குடிகாமராஜ் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொள்ளாச்சி பகுதியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது.தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும் மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். மேலும் அவர்கள் அங்கு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை மூடி மறைத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.