கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 வாகனங்கள் பறிமுதல் இருவர் கைது

கொள்ளிடம், மார்ச் 15: கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவாடி கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் காமராஜ் மற்றும் அப்பாதுரை மகன் அன்புமணி ஆகியோருக்கு  சொந்தமான டிராக்டர்களில் நேற்று முன்தினம் இரவு கீழவாடியில் கொள்ளிடம் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி கொண்டிருந்தனர். தகவலறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கபீர்தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரைக் கண்ட மணல் திருடர்கள் டிராக்டர்களை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இந்நிலையில் 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் கொள்ளிடம் அருகே உள்ள சீயாளம் மேட்டுத்தெருவை சேர்ந்த ராதா மகன் தர்மராஜ்(32) என்பவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் கொப்பியம் என்ற கிராமத்தில் ஒரு தனியார் இடத்தில் கொட்டப்பட்டிருந்த மணலை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்தபோது கொள்ளிடம் போலீசார்தடுத்து நிறுத்தி ஓதவந்தான்குடி கிராமத்தை சேர்ந்த அன்பரசன்(23) மற்றும் ஆட்டோ உரிமையாளர் தர்மராஜ்(32) ஆகியேர்களை கைது செய்தனர்.

Related Stories: