திருவாரூர், மார்ச் 14: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருவாரூரில் நாடாளுமன்றம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வரும் அடுத்த மாதம் 18ம்தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுதேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சியில் மெஹந்தி மூலம் 100 சதவிகித வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும், வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்திடும் கருவி ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பிரசாரம், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற தேர்தல் விழிப்புணர்வு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டது.